Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 2

"அம்மாஆ.."

"பாட்டிஇஇ.."

என்று கத்திக் கொண்டு வந்த மகளையும் பேத்தியையும் மித்ரா அன்போடு வரவேற்று அதன்யாவை தூக்கிக் கொண்டவளாக,

"வா ஆரு எப்டி இருக்க" என ஆருத்ராவை கேட்டபடி, அவர்கள் பின்னால் வந்த ஆருவின் ஆருயிர் கணவன் அஜய்'யை "வாங்க தம்பி" என முகம் நிறைய புன்னகையோடு மித்ரா அழைக்கவும்,

"வரேன் அத்தை" பேருக்கு சிரித்து வைத்த அஜய்க்கு அந்த வீட்டுக்குள் வந்ததும், ஏதோ ஜாம்பிகள் வசிக்கும் பங்களாவில் இருப்பதை போன்ற உணர்வு.

"மனுஷன் இருப்பானா இந்த வீட்ல.. பாவம் என் அத்தை எப்டி தான் ரெண்டு மலை மாமிசர்களை வச்சி தினமும் மேய்க்கிறாங்களோ" மித்ராவை நினைத்து பரிதாபப்பட்டவன் மண்டை டிங்'கென்றது.

"ஆஆ.. கொலை.. கொலை..என் தலைல யாரோ ஷீட் பண்ணிட்டாங்க.. ஐயோ இந்த வீட்டுல பொண்ணை எடுத்த பாவத்துக்கு சின்ன வயசுலே இப்டி அநியாயமா செத்து பரலோகம் போயிட்டேனே" அஜய் மண்டையை பிடித்துக் கொண்டு கத்த. "ஐயோ டாடி உன்ன யாரும் ஷீட் பண்ணல அம்மா தான் உன் தலைல கொட்டினாங்க", குட்டி கைகளால் வாய் பொத்தி சிரித்துக் கொண்டே அதன்யா சொல்ல.

"அப்ப நம்ம சாகலையா" என்றபடி ஆரு கொட்டிய இடத்தை தேய்த்துக் கொண்ட அஜய் மனைவியை நிமிர்ந்து பார்க்க, அவனை கோவமாக முறைத்துக் கொண்டிருந்தாள் ஆரு.

"கொஞ்சம் ஒழுங்கா தான் உக்காந்தா என்ன.. எதுக்கு பாத்ரூம் போயிட்டு அரைகுறையா வாஷ் பண்ணிட்டு வந்த மாறியே நெளிஞ்சிட்டு உக்காந்து இருக்கீங்க" ஆரு பல்லை கடிக்க,

" ஏன் சொல்ல மாட்ட, என் நிலைமைல நீ இருக்கனும் அப்பதான் என் வேதனை உனக்கு புரியும்.. நானும் என் அத்தையும் உங்க குடும்பத்துல வாக்கபட்டு படுற கஷ்டம் இருக்கேஏஏ.." கடைசியாக பேசியதை அவனையும் அறியாது சத்தமாக பேசிவிட, எதிரில் நின்றவனைக் கண்டு உச்சா வராத குறையாக எழுந்து நின்ற அஜய்,

"இவரு எப்போ வந்தாரு" என நினைத்துக் கொண்டே "ஹி.. ஹி.. வாங்க மாமா எப்டி இருக்கீங்க" என்றான் பல்லிளித்து.

"ம்ம்.. மட்டும் விரைப்பாக சொல்லிய ஆதி, அஜய்யை முறைத்து நிற்க, "ஐய்யயோ அவசரப்பட்டு உண்மைய சத்தமா உளறிட்டெனே காதுல விழுந்து இருக்குமோ" அஜய் முழித்து நின்றான்.

"தாத்தாஆ.." என ஓடி போய் ஆதியின் மேல் ஏறிய அதன்யாவை தூக்கிய ஆதி, பேத்தி கன்னத்தில் முத்தம் வைத்தவனாக, "ஆரு எப்டி இருக்க, உனக்கு அங்க ஒன்னும் குறை இல்லையே.. அஜய் உன்னையும் குழந்தையும் நல்லா பாத்துக்குறானா இல்லனா சொல்லு போட்டு தள்ளிடலாம்" அஜயை முறைத்தபடியே ஆதி சொல்லியதில், அவன் மிரண்டு போய் ஆருவையும் மித்ராவையும் பாவமாக பார்த்தான்.

இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டதை பார்த்து, "ஹாஹா ஒன்னு கூடிட்டாய்ங்கையா ஒன்னு கூடிட்டாய்ங்க.. உன்ன காதலிச்சி கல்யாணம் பண்ணதுக்கு இன்னும் உன் அப்பா என்னை கொலை மட்டும் தான் டி பண்ணல" மனதில் குமுறியவன்,

"ஆரு என்னைய காப்பாத்து டி" ஆருவிடம் அவன் கண்களால் கெஞ்சவும், சரி போனா போகட்டும் என கண்களால் கணவனுக்கு சமிக்கை செய்தவளாக,

"அதெல்லாம் நல்லா பாத்துக்குறாங்கப்பா.." என்றாள் புன்னகையாக.

மகள் மகிழ்ச்சி கண்டு திருப்திபட்ட ஆதி மனைவி மனைவியை பார்க்க, "ஏன் பார்க்கிறான்" என சிறிது நேரம் புரியாமல் முழித்த மித்ரா, அவன் அழுத்தமான பார்வை புரிந்ததும், "அச்சோ எப்டி மறந்தேன்" மனதில் புலம்பியவாறே வேகமாக கிட்சன் சென்று, அனைவருக்கும் குடிக்க, டீயும், அதன்யாக்கு மில்க்ஷேக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"அம்மா ஆத்வி எத்தனை மணி பிளைட்ல வரான்"

"நைட் எட்டு மணி ஆரு.." பதில் தந்த மித்ராக்கு, இரண்டு வருடம் கழித்து வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் மகனை பார்க்க போகும் பூரிப்பில் இருந்தாள்.

"அஜய் நைட் நீயும் என்கூட வா, அவனை பிக்கப் பண்ண" ஆதி சொன்னதும்,

"என்னது நானா" அதிர்ந்து கேட்டவனை முறைத்த ஆதி,

"உன் பேர் தானே அஜய்"

"ஆமா மாமா" அவன் பாவமாக சொல்ல,

"அப்போ உன்ன தான் கூப்பிட்டேன் ரெடியா இரு" கூலாக சொன்ன ஆதி "தன்யா வா கடைக்கு போயிட்டு வரலாம்" பேத்தியை அழைக்க,

"அய்ய் சூப்பர் தாத்தா.. வாங்க போலாம்" என தாத்தாவும் பேத்தியும் வெளியே சென்றதும் தான் அஜய்க்கு மூச்சே சீரானது.

"தம்பி, நீங்க உள்ள போய் ரெஸ்ட் எடுங்க" மித்ரா சொல்ல,

"இல்லை அத்தை இருக்கட்டும், ஆமா எப்டி அத்தை இவரு கூட இத்தனை வருஷத்தை ஓட்டினீங்க.. பேருக்கு கூட மனுஷன் சிரிச்சி நான் பாத்ததே இல்லை, பாவம் அத்தை நீங்க" அஜய் சொல்லியதை கேட்டு சிரித்த மித்ரா,

"அவர் எப்பவும் அப்டி தான் தம்பி எனக்கு பழகிடுச்சு" என்றாள்.

"அது சரி" அவன் சலித்துக் கொண்டாலும், ஆதியின் கடுமையில் மறைந்திருக்கும் அன்பை அவன் உணராமல் இல்லை. பயணக் கலைப்பில் அப்படியே ஷோபாவில் மட்டயாகி விட்டான்.

"அம்மா, சித்தப்பா எப்டி இருக்காரு இப்ப அவருக்கு பரவால்லையா" ஆரு கவலையாக கேட்டதும் கலங்கி போன மித்ரா,

"மாமா அப்டியே தான் இருக்காரு ஆரு, போய் நீயே பாரு" சகல வசதியும் உள்ள பெரிய அறையில், படுக்கையில் கை கால்கள் செயலிழந்த நிலையில் கண் மூடி உறக்கத்தில் இருந்த விக்ரமை கண்டு ஆருத்ராக்கு அழுகையாக வந்தது.

"இன்னும் எவ்ளோ நாள் தாம்மா சித்தப்பா இப்டியே இருப்பாரு.. நானும் ஒவ்வொரு முறையும் ஊர்ல இருந்து வரும்போதுலாம் சித்தப்பா எழுந்து நடப்பாருனு ஆசையா வந்தா, சித்தப்பாவ இப்டி பாக்க முடியல ம்மா.." விக்ரம் அருகில் அமர்ந்து ஆரு கண் கலங்கினாள்.

"உனக்கு தெரியாததா ஆரு, உன் அப்பாவும் எத்தனையோ பெரிய பெரிய டாக்டர்ஸ் கிட்டலாம் மாமாவை கொண்டு போய் ட்ரீட்மெண்ட் பண்ணி பாத்துட்டாரு.. ஆனா யாருமே சரியாகிடும்னு தெளிவான பதில் சொல்லலையேம்மா.. விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து என் மாமாவ கொஞ்ச நேரம் அசதியா படுத்து கூட நான் பாத்ததே கிடையாது, ஆனா இப்ப 15 வருஷமா படுக்கைளே இருக்குறத பாக்கும் போது தாங்க முடியல ஆரு" மித்ரா கண்ணீரோடு சொல்ல. ஆருக்கு விக்ரமை பார்த்து மிகவும் கஷ்டமாகி போனது.

** ** **

"ஆத்வி நீ பண்றது எதுவும் சரியே இல்லை டா.. நீ தான் இந்தியா போறேன்னா, என்னையும் ஏன்டா உன்கூட பிடிச்சி இழுத்துட்டு வர்ற.. இந்தியா போனா என் அம்மா பாத்து வச்ச பொண்ணை கட்டிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க..

இது போதாதுனு நீ ரேஸ்ல கலந்துகிட்ட விஷயம் இந்நேரம் உன் அப்பாக்கு தெரிஞ்சிருக்குமான்னு கூட தெரியல, அதை நினைச்சா வேற இப்பயே வைத்த கலக்குது டா.." பிளைட்டில் ஜன்னல் சீட்டில் அமர்ந்து கண் மூடி இருக்கும் ஆத்விக்கிடம் கத்திக்கொண்டிருந்தான் அசோக்.

"அதுக்கு என்ன டா பொண்ணு நல்லா இருந்தா கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் அப்பாக்கு எப்பயோ ரேஸ் நியூஸ் போயாச்சு" என்றான் அசால்ட்டாக.

"டேய் என்னடா சொல்ற.. உன் கூட பழகின பாவத்துக்கு என் கனவையே கலைக்க நெனச்சதும் இல்லாம, என் வாழ்க்கைக்கே பங்கம் பண்றியே டா பாவி" அசோக் அதிர்ந்து திட்ட, அதுவரை கண் மூடி இருந்தவன் வேகமாக கண் திறந்து அசோக் முகத்தருகில் வந்து தூ.. என துப்பி விட்டு மீண்டும் இருக்கையில் சாய்ந்து கண் மூடிக்கொண்டான்.

"சேத்துலயும் அடி வாங்கியாச்சு, உன் எச்சிலையும் அடிவாங்கியாச்சு.. இனிமேலும் கட்னா வெள்ளைகாரிய தான் கட்டணும்னு இருந்த என் கனவு இலட்சியத்தை எல்லாம் இன்னையோட கை விட வேண்டிய நேரம் இது" கைகளை முறுக்கிக் கொண்டு தனியாக பேசியவன் தலை டிங்'கென்று மணி அடிக்கும் ஓசை கேட்க, "ரைட்டு சைத்தான் மலை ஏறிடுச்சு இனிமே வாயத் தொறந்தா பறக்குற பிளைட்ல இருந்து என்ன பிடிச்சி தள்ளி விட்டாலும் விட்ருவான்" மனதில் நினைத்து கப்சிப்பென வாய் மூடிக் கொண்டான்.

** ** **

சோபாவில் படுத்து உறங்கிய அஜய் திடீரென அலறி அடித்துக் கொண்டு எழுந்தவன், அவன் எதிரில் மாப்பிளை போல டிப்டாப்பாக ரெடியாகி கண்ணில் கூலிங்கிளாஸுடன் விரைப்பாக நிற்கும் ஆதியை கண்டு வாய் பிளந்து பார்த்தான்.

"இவரு நமக்கு மாமனாரா இல்லை நான் இவருக்கு மாமனாரான்னே தெரியலையே.. இந்த வயசுலயும் பிட்டா செம்மையா இருக்காரு" அவன் பாட்டுக்கு அவன் எண்ணத்தில் உழன்று கொண்டிருக்க,

"டேய் போதும் சைட் அடிச்சது.. ஆம்பள என்னையே இந்த பார்வை பாக்குற ராஸ்கல் என் பொண்ணை என்ன பாடு படுத்துவ" ஆதி போட்ட சத்தத்தில் திடுக்கிட்டு போன அஜய்,

"ஐயோ சாரி மாமா.. ஆனா நீங்க சொன்னதுல ஒரு சின்ன திருத்தம், உங்க பொண்ணு தான் மாமா என்னைய போட்டு படுத்தி எடுக்குறா" தலை குனிந்துக் கொண்டு அஜய் சொல்லியதை கேட்டுக் கொண்டே விக்ரம் அறையில் இருந்து வெளி வந்த ஆரு தலையில் அடித்துக் கொண்டு செல்ல,

அவள் பின்னே வந்த மித்ரா, "டைம் ஆச்சி வெட்டி பேச்சி வளக்காம சீக்கிரம் போய் ஆத்விய கூட்டிட்டு வாங்க" ஆதியிடம் முறைப்போடு சொல்லி, "எப்பபாரு மாப்பிளைனு ஒரு மரியாதை இல்லாம அவர்கிட்ட வம்பு வளத்துட்டு" முணுமுணுப்பாக கடிந்து சென்றாள்.

"ஓஓ.. உன் மாப்பிளை பொண்ணு எதிர உன்னைய ஒன்னும் பண்ண மாட்டேன்னு மிதப்புல சத்தம் போட்ரியா இருக்கு டி உனக்கு,." மனதில் கருவிக் கொண்ட நேரம்,

"மாமா.. மாமா.. ரொம்ப அர்ஜென்டா வருது, பாத்ரூம் மட்டும் போயிட்டு வந்துடறேன் மாமா.." அஜய் கெஞ்ச கெஞ்ச, அவன் தோளில் கை போட்டு இழுத்து சென்றான் ஆதி.

"ஐயோ முடியலையே.." கால்கள் இரண்டையும் டைட்டாக இறுக்கி அமர்ந்தபடி போக்கிரி வடிவேலு போல,
"மாமா இங்க நிறுத்துங்க.. மாமா அங்கயாவது நிறுத்துங்க.. சரி அதுவும் இல்லனா இப்டி நிறுத்துங்க.." அவசரம் தாங்காது எப்போது டேங்க் வெடிக்குமோ என்ற பயத்தில் அஜய் ஒவ்வொரு இடமாக காட்டிக் கொண்டே வர்ற, அதை எல்லாம் காதிலே வாங்காத ஆதி மின்னல் வேகத்தை காரை ஓட்டுவதை பார்த்த அஜய்,

"இன்னைக்கு உங்க காரை என் சிறுநீரால குளிப்பாட்டணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்" என அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே சட்டென சடன் பிரேக் போட்டு ஆதி காரை நிறுத்தவும், டப் என்ற டயர் வெடிக்கும் சப்த்தம் அஜய் வயிற்றில் கேட்டது.

அவனை முறைத்த ஆதி "போய் தொலை" என்றவனாக அவசரமாக காரை விட்டு இறங்கி செல்ல,

"ஐயோ பாவம் மாமாக்கும் நம்ல போல அவசரமாக வந்துடுச்சி போல" புலம்பியபடி வேகமாக கார் கதவை திறந்துக் கொண்டு ஓடியவன், சுவற்றில் கையை முட்டு கொடுத்து கண் மூடி நின்றவனுக்கு இப்போது தான் சீரான மூச்சி வெளியேறியது.

"அம்மாஆஆ.. ஆஆ.. வலிக்குதே.." நடு சாலையில் விழுந்து எழக் கூட முடியாத நிலையில், கை கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய ஒரு இளம்பெண் தேம்பி அழுதுக் கொண்டிருக்க. சாலையில் போவோர் வருவோர் எல்லாம் அவளை வேடிக்கை பார்த்து சென்றார்களே தவிர்த்து யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை,

அதை கண்ட ஆதி காரை நிறுத்தி விட்டு அந்த பெண்ணிடம் ஓடி வந்தவனாக, "ஏய்.. என்னாச்சி உனக்கு, ஏன் இப்டி ரோட்ல விழுந்து கிடக்குற" என்னவோ அவள் ஆசையாக ரோட்டில் விழுந்து இருப்பதை போல, மிரட்டலாகவே கேட்க, பாவம் அந்த பெண்ணுக்கு தான் அவன் பேசியது எதுவும் புரியாமல் மேலும் அழுதாள்.

அதில் எரிச்சலுற்றவன், "ஏய்ய்.. இப்ப ஏன் அழற, உனக்கு என்னாச்சின்னு தானே கேட்டேன்" ஆதி கோபத்தில் கத்த, அவன் பேசுவது அவளுக்கு கேட்டாள் தானே பதில் சொல்ல முடியும்! ஆனால் அவன் பேசும் வாயசைவை வைத்தே தன்னை திட்டுவது புரிந்தவளாக,

"அ.அங்கிள் எ.எனக்கு காது கேக்கல" என்று கேவி அழ,

"இடியட் இவ்ளோ சத்தமா பேசுறேன், காது கேக்கலைன்னு சொல்ற.. எங்கருந்து தான் என் உயிர வாங்க வந்து இங்க விழுந்து கிடைக்குறியோ.. இப்பயாவது கேக்குதா இல்லையா, சொல்லு எப்டி அடி பட்டுச்சு" ஆதி கத்திய கத்தலில் வேறு யாராவது அந்த பெண் இருக்கும் இடத்தில் இருந்திருந்தால் காது ஜவ்வு கிழிந்து இருக்கும்.

ஆனால் அந்த பெண்ணோ அப்போதும் ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் அவள் காயங்களை பார்த்து தேம்பி தேம்பி அழுவதை கண்டு யோசனையாக நெற்றி சுருக்கிய ஆதி, அந்த பெண்ணை உற்று நோக்கினான்.

"ஏய் பொண்ணே.. பாப்பா.. என்னை பாரு" என்று கத்தி கத்தி அழைத்து பார்த்தும், அவள் தனது காயங்களை பார்த்து தான் அழுதாளே தவிர்த்து, ஆதி அழைத்தது எதுவும் அவளுக்கு கேட்கவில்லை போலும்.

புயல் வீசும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top