Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 8

கை கால்களை சுத்தம் செய்து வந்த ஆதி உணவு மேஜையில் அமர்ந்து, படபடப்பாக கரங்கள் நடுங்க உணவை பரிமாறிக் கொண்டிருக்கும் மனைவியை ஆர்ப்பாட்டமின்றி பார்த்தவன், "மித்துபேபி நீயும் உக்காந்து சாப்டு" என்றான் மெதுவான கட்டளையிட்டு.

"இல்லங்க எனக்கு பசிக்கல நீங்க சாப்பிடுங்க" என்றவள் அவனுக்கு பரிமாற, வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்ட ஆதி, ஆரு தன்யாவை அழைத்துக் கொண்டு உறங்க வைக்க எப்போதோ சென்றிருக்க இப்போது யாரும் இல்லாததை உணர்ந்தவனாக, சட்டென மனைவியின் கரத்தை பிடித்திழுத்து தன் மடியில் அமர்த்தி இருந்தான்.

யாராவது பார்த்தால் என்னாவது என்ற அதிர்ச்சியில் அவள் ஏதோ பேச "ஏங்.." என்று வாய் திறக்கவும், உணவை அள்ளி வாயில் வைத்தவன்,
"நீ பயந்து சாகுற அளவுக்கு இப்ப இங்க யாரும் இல்ல டி சீக்கிரம் சாப்டு.. உன் பையன நினைச்சி நீ சரியா சாப்பிடலைன்னு உன் மூஞ்ச பாத்தாலே தெரியிது" என்றான் சன்னமான குரலில்.

தன் முகம் பார்த்தே உணவு உண்டேனா இல்லையா என்று சரியாக கணித்து விடும் கணவனை எண்ணி உள்ளூற மகிழ்ந்த மித்ரா, வேறு வழி இல்லாமல் கணவன் கொடுக்கும் உணவை மொத்தமும் காலி செய்தவளாக,

"சாப்ட்டு முடிச்சிட்டேனே இப்பயாவது விடுங்களேன் யாராவது வந்திட போறாங்க" என்றாள் பாவமாக.

"வந்தா வரட்டும் மித்துபேபி முதல்ல நீ எனக்கு ஊட்டு" என்றவனாக அவள் உணவை ஊட்டி முடிக்கும் வரை அமைதியாக இருந்த ஆதி, மனைவியின் முகத்தில் படிந்திருந்த சோகத்தை படித்து விட்டான் போலும்.

"இப்ப உன் பையன் எங்க இருக்கான் என்ன பண்றான்னு தெரியணும், அதுக்கு தானே முகத்தை இப்டி வச்சிருக்க" அவன் பற்களை கடிக்க,

"ம்ம்.. ஏன்னு தெரியலங்க இன்னைக்கு முழுக்க எனக்கு அவன் நெனப்பு தான், ஏதோ பிள்ள தனிமைல கஷ்ட படுற மாதிரி மனசு அடிச்சிக்கிது.. ஒருமுறை அவன் முகத்தை பாத்துட்டா நிம்மதியா இருக்கும்" கவலையாக சொல்லும் மனைவியிடம், எப்படி தனக்கு தெரிந்த உண்மையை சொல்வது என்ற வருத்தம் ஆதியை ஒட்டிக் கொண்டது.

கவியின் பிரச்சனை நடந்து முடிந்த பிறகு, ஆத்வி யார் சொல்லும் கேளாமல் பார் சென்று தடுக்க தடுக்க குடிப்பதை கண்ட நண்பர்களுக்கு அடுத்து என்ன செய்வது, அவனை எப்படி சமாதானம் செய்வது என்று ஒன்றும் புரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்து இருக்க, சரியாக ஆதியிடம் இருந்து அழைப்பு வந்தது அசோக் எண்ணுக்கு.

"நாளை அலுவலகத்திற்கு எப்படியாவது ஆத்வியை கூட்டி வர வேண்டியது எல்லாம் அசோக் உன் பொறுப்பு தான்" என்று சொல்ல தான் அழைத்திருந்தான். அதற்குள் ஆதிக்கு விடயம் அறிந்து தான் தனக்கு போன் செய்திருக்கிறான் என்று பயந்த அசோக், பேருந்தில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி இருந்தான்.

இதை கேட்ட ஆதி எப்படி எடுத்துக் கொண்டான் என்றே புரியவில்லை. மகன் மேல் முழுதாக நம்பிக்கை இருந்தது அவன் தெரிந்தே அந்த தவறை செய்திருக்க மாட்டான் என்று. இருந்தும் மகனின் குணமும் நன்றாக அறிவானே!

இனி எக்காரணம் கொண்டும் அந்த பெண் அவன் கண்ணில் படக்கூடாது என்று மானசீகமாக மனதில் நினைத்துக் கொண்டவனுக்கு, அந்த பெண் மீதும் லேசாக கோவம் எட்டிப் பார்க்க தான் செய்தது. அவள் பார்கவி என்று தெரியாமல், ஒருமுறை ஆத்வியின் பக்கம் இருந்து யோசித்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒருமுறையேனும் காது கொடுத்து கேட்டிருக்கலாமே என்ற கோவம் தான்.

"மித்து பேபி அவன் பிரண்ட்ஸ் கூட வெளிய போய் இருக்கான், காலைல வந்திடுவான் நீ வா நம்ம போய் படுக்கலாம்" என்றவனுக்கு மனைவியிடம் உண்மையைக் கூறி அவளை சங்கடப்படுத்த துளியும் எண்ணம் இல்லை.

** ** **

"என்ன கவி, இன்னும் நடந்ததியே நெனச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்கியா" சோகமே உருவாக இருந்தவளை கண்டு ஸ்வாதி வினவ,

"பின்ன என்ன பண்ண சொல்ற ஸ்வாதி, அந்த ப்ளடி இடியட்டால இன்டெர்வியூவ மிஸ் பண்ணிட்டேன் இந்த முறை கண்டிப்பா வேலை கிடைச்சி இருக்கும் ஸ்வாதி.. இனிமே எங்க போய் எந்த ஹாஸ்பிடல்ல வேலை தேடுறது, ஒன்னும் புரியல" தலையில் கை வைத்து ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

"சரி ஒன்னும் ஃபீல் பண்ணாத கவி இந்த வேலை இல்லனா என்ன, நீ வேணா பாரேன் இதை விட வேற நல்ல வேலை உனக்கு கிடைக்கும்" மேலும் பலவாறு ஆறுதல் கூறி கவியை சமாதானம் செய்த ஸ்வாதி, உணவு கொடுத்து படுக்க வைத்தாள். இனி வரப் போகும் இரவுகளில் இந்த தூக்கம் கவிக்கு நிலைக்குமோ! என்னவோ?.

அழகான விடியல் பொழுது. பொழுது மட்டுமே அழகாக புலர்ந்தது ஆத்விக்கு. அவன் மனமோ நேற்று கவி ஏற்படுத்திய அவமானத்தில் உழன்று தீக் குழம்பாக கொதித்துக் கொண்டு இருந்தது.

எத்தனையோ அழகு பெண்கள் குழைந்து கொஞ்சல் மொழி பேசி, காதல் பாஷை பேசி, அங்க வளைவுகளை தாராளமாக காட்டி AK..AK.. என்று அவனை சுற்றி சுற்றி வந்து, அவன் மேல் விழுந்து தானாக உருகிய போதும் எந்த பெண்ணின் மீதும் தவறான ஒரு பார்வையை கூட வீசிடாதவன், தனக்கென்ன என்று யாரோ ஒருத்தி பேருந்தில் அமர்ந்திருக்க அவள் முகத்தை கூட இதுவரை கண்டிடாதவனுக்கு என்ன ஆசையா, அவளை அத்தனை பேர் முன்னிலையில் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று.

என்ன முயற்சி செய்தும் அவளையும், அவள் முகத்தையும், அவள் கன்னத்தில் அறைந்த அறைகளும், அவள் ஏற்படுத்திய அவமானமும் மறக்க முடியவில்லை அவனால். குடித்து குடித்து வேறு தலை பாரமாக இருக்க, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் முன்னால்,

"இதை குடி" என கண்ணாடி தம்ளாரில் லெமன் ஜூஸ் நீட்டப்பட்டது.

நிமிர்ந்து பார்க்க அசோக் தான் நின்றிருந்தான். ஆத்வி மொத்தமாக மட்டையானதுமே மூவரும் சேர்ந்து அழைத்து வந்த இடமோ, ஆதியின் கெஸ்ட்ஹவுஸ்க்கு தான். அழைத்து செல்ல சொன்னதும் ஆதியே.

"என்ன டா இது" என்றபடியே அசோக் கையில் இருந்து ஜூசை வாங்கி பருக.

"டேஸ்ட் பாத்தியே எப்டி தெரியிது" என்றவன் அவன் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.

அசோக்கை முறைத்தவன், "கெஸ்ட்ஹவுஸ் வந்திருக்கோம்னா அப்ப அப்பாகிட்ட எல்லாத்தையும் உளறி வச்சிட்ட அப்டி தானே டா" என்றான் பல்லைக் கடித்தபடி.

அதில் திருத்திருவென முழித்த அசோக் "இப்ப அதுவா முக்கியம், உன்ன இங்க நைட் கூட்டிட்டு வந்து விட்டு என் தலைல கட்டிட்டு அந்த ரெண்டு தடிபசங்களும் வீட்டுக்கு கிளம்பிட்டானுங்க. ஆண்டி வேற உன்ன சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க இந்தா கார் சாவி நீ வீட்டுக்கு கிளம்பு.. என்னையும் எங்க அப்பா வர சொன்னாராம் நானும் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்" என்ற அசோக் அங்கு நிற்காமல் ஓடி இருந்தான். எங்கே தன்னையும் அழைத்துக் கொண்டு போய் ஆதி முன்பு நிறுத்தி விடுவானோ என்ற பயம் தான்.

"என்னத்த இன்னும் உங்க கைபிள்ளைய தேடற படலம் முடியலையா" வேலைக்கு செல்ல தயாராகி உணவருந்த வந்த அஜய் கேட்க,

"என்ன தம்பி நீங்களும் என்ன கிண்டல் பண்றீங்க, பாவம் புள்ள நைட் சாப்டானோ இல்லையோ" எனும் போதே அப்பா மகள் பேத்தி என்று குடும்பமே கூடி இருக்க, அதில் ஆதி மட்டும் மனைவியை யாரும் காணாத வாரு முறைத்து வைத்தான். பின்னே இரவெல்லாம் அவள் கவலை படுகிறாள் என்று எப்படி எல்லாம் அவன் வழியில் சமாதானம் செய்தான், காலையில் எல்லாம் வீணாகி விட்டதே!

"பாட்டி, டோன்ட் வரி மாமா சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க" தன்யா சொல்லும் போதே மின்னல் வேகத்தில் உள்ளே வந்தான் ஆத்வி.

அவனை கண்டதும் கலக்கம் நீங்கி சிறு புன்னகை உதட்டில் தவழ, "ஆத்விஇ.." என்றபடி அவனிடம் ஓடிய மித்ரா, "ஏன்டா நைட்லாம் வீட்டுக்கு வரல உன்ன நெனச்சி எவ்ளோ கவலை பட்டேன் தெரியுமா, எங்க போன என்னனு சொல்லிட்டு போக மாட்டியா.. சரி சாப்டியா இல்லயா ஏன் உன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு" என்று அவள் பாட்டுக்கு கேள்விகளை தொடுத்துக் கொண்டே செல்ல,

தாயின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என ஒரு நொடி தயங்கி, "மாம்.. என் போன் கை தவறி கீழ விழுந்து ஒடஞ்சி போச்சி அதான் என்னால உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியல, அதோட பிரண்ட்ஸ் கூட இருந்ததால நேரம் போனதே தெரியல இனிமே இப்டி நடக்காம பாத்துக்கிறேன் மாம்.." வாய்க்கு வந்ததை அடித்து விட, மீண்டும் கேள்வி கேக்க அவள் வாய் துரக்கும் முன்பே, "மித்தூ.." என்ற அதிகாரக் குரலில் அமைதியாகிப் போனாள்.

"சரி டா நீ போய் பிரெஷாகிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேம்" மித்ரா சொல்ல, சரி என தனதறைக்கு வந்தவன் ஏதோ ஒரு முடிவெடுத்தவனாக குளித்து முடித்து தயாராகிக் கீழே வந்தான்.

"மித்து இன்னைக்கு அவன் இருக்கட்டும் நாளைல இருந்து அவனை கம்பனி வர சொல்லு" ஆதி சொல்லிக் கொண்டு இருக்க,

"ஏன் இன்னைக்கு வந்தா என்ன, நான் இன்னைக்கே கம்பனி வரேன்னு சொல்லுங்க மாம்.." ஆத்வி சொல்லவும், ஆதி உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான். மித்ராவை விட அவன் தானே மகனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவன். ஆதி முன்னால் என்றால் பின்னால் என்பான். பின்னால் என்றால் முன்னால் என்பான்.

அது தெரிந்து தானே அவன் வருவதை ஓரக்க்கண்ணால் பார்த்தபடி மனைவியிடம் சொன்னது.

"என்ன ஆத்வி சொல்ற இனிமே அப்பாக்கூட கம்பனி போறியா" மித்ரா புன்னகையோடு கேக்க,

"மாம்.. நான் கம்பனி போறேன் தான் ஆனா டாட் கூட இல்ல, தனியா கம்பனி தொடங்க போறேன்" என்றதும் அதிர்ச்சியான மித்ரா.

"என்ன டா சொல்ற.. நீ எதுக்கு தனியா கம்பனி தொடங்கணும்.. அதான் நம்மகிட்டவே நிறைய கம்பனி இருக்கே, அதை எல்லாத்தையும் உங்கப்பா தனியா மேனஜ் பண்ண எவ்ளோ கஷ்டப் படுறாரு, அதுவும் அதெல்லாம் உனக்கு தானே சொந்தம் அப்புறம் ஏன்" கேள்வியாக பார்த்தாள்

"மாம்.. நான் எனக்குன்னு ஒரு பேர் உருவாக்கிகிட்டு அதுக்கப்பறம் அதெல்லாம் பாத்துக்குறேன், அதுவரைக்கு டாட்க்கு துணையா நீங்க வேனா கூட போயிட்டு வாங்க" என்று கண்ணடிக்க,

"ச்சீ.. போடா ராஸ்கல்" அவனை செல்லமாக முறைத்த மித்ராக்கு உள்ளூர வெட்கமாகிப் போனது. பழைய மலரும் நினைவுகளை எல்லாம் நினைத்துப் பார்த்து.

ஆதி எதற்கும் மறுப்பு கூறவோ பதில் பேசவோ இல்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தவன், "மித்து அவன் என்ன பண்ணனும்னு நினைக்கிறானோ பண்ணட்டும் விடு" என்றிட,

"அப்பா அப்ப உங்களுக்கு துணையா யார் இருப்பா, நம்மகிட்ட இருக்க மொத்த கம்பனிகளையும் பாத்துக்க நீங்க எவ்ளோ சிரமப் படுறீங்க" தந்தையின் கஷ்டத்தை நினைத்து வருத்தமாக கேட்டாள் ஆரு.

"அப்ப அஜய்ய கம்பனி பொறுப்ப எடுத்துக்க சொல்லு" என்றதும் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த அஜய்க்கு புரையேறி விட்டது.

"ஐயோ மாமா அப்புறம் என் கம்பனி எல்லாம் யாரு பாக்குறது" பதறிப் போய் கேட்ட அஜய்க்கு மாமனார் உழைப்பில் உக்காந்து சாப்பிடுவது என்பது பிடிக்காத ஒன்று. அதுவும் இல்லாது அவன் தனியாக சொந்த உழைப்பில் தொடங்கிய ஏற்றுமதி நிறுவனத்தை கவனித்து கொள்வதற்க்கே நேரம் பஞ்சாக பறந்து விடுகிறதே!

அவன் எண்ணம் ஆதிக்கும் தெரியும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் யார் கையையும் எதிர்பாராமல் மனைவி பிள்ளையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு இருப்பவன் தான் அஜய். ஆதியை கண்டால் அனைவரும் அஞ்சி நடுஞ்சி செல்போர்க்கிடையில், தைரியமாக அவன் முன் வந்து,

"உங்கள் மகளை விரும்புகிறேன் திருமணம் செய்து கொடுங்கள்" என நேருக்கு நேராக பார்த்து கேட்டவனை மிகவும் பிடித்து தான் போனது ஆதிக்கு. இப்போது கூட ஆதியை பார்த்து அவன் பயந்து நடுங்குபவன் இல்லை, மாமனாரின் மேல் உள்ள அளவுகடந்த மரியாதையால் பணிந்து செல்கிறான்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க, விக்ரம் இருக்கும் அறையில் ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் உள்ளே சென்றுப் பார்க்க, இன்ப அதிர்ச்சியில் சிலையாக நின்று விட்டனர் குடும்பம் மொத்தமும்.

இத்தனை வருடங்களாக கை கால்களை கூட அசைக்காமல் உயிர் இருந்தும் வெறும் உடலாக இயற்கை சுவாசத்தின் உதவியால் படுக்கையில் படுத்துக் கிடந்த விக்ரம், மூடிய கண்களை உருட்டி கையை அசைக்கயில், கையில் பொருத்தி இருந்த வயர்கள் இழுத்து மானிட்டரில் இருந்து சத்தம் எழுப்பியது.

"ஆரு, மாமா கை அசைக்கிறாரு.. ஐயோ" என மகிழ்ச்சியில் திளைத்து கைகளால் வாயை மூடி மித்ரா கண் கலங்கி நிற்க,

ஆருவும் தாயைக் கட்டிக் கொண்டவளாக, "ஆமா.. ம்மா.." என்றாள் கண்ணீரோடு, அதற்குள் ஆதி மருத்துவருக்கு அழைத்திருந்தான்.

புயல் வீசும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top